Youtube Link
https://www.youtube.com/watch?v=-8E1jw22oUo
வேதபகுதி: 1சாமுவேல்26:25, அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்: நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய் என்றான், அப்படியே தாவீது தன் வழியே போனான், சவுலும் தன் ஸ்தானத்திற்குத் திரும்பினான்.
தலைப்பு: 1சாமுவேல் புத்தகத்தில் வரும் ஒரு சில மனிதர்களைக் குறித்தும், அவர்களின் குணாதிசயங்கள் பற்றியும் தியானிக்கலாம்.
1,2ம் அதிகாரத்தில் அன்னாளை பற்றி பார்க்கலாம். ஜெபிக்கிற பெண், அவளுக்கு குழந்தையில்லை. அதனால் அவள் கணவன் அந்நாட்களில் பெனின்னாள் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். பெனினாளுக்கு குழந்தைகள் பிறந்தது. அன்னாளுக்கோ குழந்தை இல்லை. அவளுடைய கர்ப்பத்தை கர்த்தர் அடைத்திருந்தார் என்று வேதத்தில் பார்க்கிறோம்.
முதல் அதிகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகை கொண்டாடுவதற்கு வரும்போதெல்லாம் அன்னாள் துக்கமுகமாய் இருப்பாள். பெனின்னாள் மனமடிவாக்கும் வார்த்தைகளால், அன்னாளை காயப்படுத்துவாள். எல்க்கானா அன்னாளை ஆறுதல் படுத்துவான். இந்த சூழ்நிலை எப்போது மாறும் என்று அன்னாள் துக்கத்தோடே இருப்பாள்.(1சாமு1:10) அவள் போய் மிகவும் அழுது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள். அதன் பின்பு அவள் துக்கமுகமாய் இருக்கவில்லை. 1சாமுவேல் 1:20, சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.
அன்னாளுடைய வாழ்க்கையில் புதிய ஆரம்பம் - கர்ப்பவதியாக மாறுதல்.
1ம் அதிகாரத்தில் அன்னாள் மலடியாக அறிமுகப்படுத்த படுகிறாள், இதே அதிகாரத்தின் முடிவில் கர்ப்பவதியாகி குமாரனை பெற்று சாமுவேல் என்று பெயர் வைக்கிறாள். அவனை தேவனுடைய ஆலயத்தில் கொண்டு போய் விடுவதை பார்க்கலாம்.
1சாமுவேல் புத்தகம் 3 முக்கிய காரியங்களை உள்ளடக்கியது.
1.புதிய ஆரம்பம்- அன்னாள், எல்க்கானா, ஏலி, தாவீது, சவுல், சாமுவேல் இவர்கள் வாழ்க்கையில் தேவன் புதிய ஆரம்பத்தை ஏற்படுத்தினார்.
2.புதிய அறிமுகங்கள்.
3.புதிய ஆசீர்வாதங்கள்.
1ம் அதிகாரத்தில் ஆரம்பத்தில் 3 பிரச்சனைகள் அன்னாளின் வாழ்க்கையில் இருப்பதை பார்க்கலாம்.
அன்னாள் சந்தித்த பிரச்சனைகள்:
• மற்றவர்களால் காயப்படுத்துகிற வார்த்தைகள். (பெனின்னாளுடைய வேதனைப் படுத்துகிற வார்த்தை அது ஏற்படுத்துகிற ஒரு வலி.)
• உனக்குதான் எல்லாம் இருக்கிறதே நீ ஏன் கவலைப்படுகிறாய் என்று நிஜமான உண்மையான வேதனையை புரிந்து கொள்ளாத கணவன். (எல்க்கானாவின் தவறான புரிதல்.)(1சாமுவேல்1:8.)
• ஆலயத்தில் போய் ஜெபிக்கும் போது ஆசாரியன்(ஏலி) கூட தவறாக புரிந்துகொண்டு நியாயம் தீர்க்கப்பட்ட பெண்மணி. ( நீ எந்த மட்டும் குடித்து வெறித்திருப்பாய்.)(1சாமுவேல்1:14).
ஜெபத்தை கூட தவறாக பேசுகிற உலகம்.
நீங்கள் இந்த 3 காரியங்களில் ஏதாவது ஒன்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?
புதிய ஆரம்பம்:
அன்னாள்(1சாமுவேல்1:5)
அன்னாளின் வாழ்க்கையில் தேவன் ஒரு புதிய ஆரம்பத்தை ஏற்படுத்தினார்.1சாமுவேல்1:20 வேதனைகள் அவளை நெருக்கின போது, தேவன் ஒரு புதிய ஆரம்பத்தை ஏற்படுத்தினார். சோதனை நெருக்கின போது அன்னாள் தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள். எனவே நாமும் சோதனையின் நேரத்தில் தேவனை நோக்கிப் பார்க்கிறவர்களாய் இருக்க வேண்டும். ஏற்ற நேரத்தில் தேவன் நம்மை நினைத்தருளுவார். நம் வாழ்க்கையிலும் புதிய ஆரம்பத்தை ஏற்படுத்துவார்.
புதிய அறிமுகம்:
1சாமுவேல்1:20, அன்னாள் மலடியல்ல என அவள் அடையாளத்தை தேவன் மாற்றி புதிய அறிமுகத்தை கொடுத்தார். அன்னாள் தான் பெற்ற குழந்தையை தேவனுக்கு அர்ப்பணித்து புதிய அறிமுகத்தை சாமுவேலுக்கும் ஏற்படுத்தினாள்.1சாமுவேல்3:19, அன்னாள் தேவனுக்கு அர்ப்பணித்த அந்த குழந்தைக்கு(சாமுவேலுக்கு) தேவன் ஒரு புதிய அறிமுகத்தையும் கொடுத்தார். சாமுவேல் தீர்க்கதரிசி என்ற அறிமுகத்தை கொடுத்தார்.
புதிய ஆசீர்வாதங்கள்:
1சாமுவேல்2:21, அன்னாள் தனக்கு கிடைத்த புதிய ஆரம்பம், புதிய அறிமுகத்தை தேவனுக்கு என்று கொடுத்ததினால் தேவன் புதிய ஆசீர்வாதங்களை அவளுக்கு கொடுத்தார். சாமுவேல் என்ற ஒரு குழந்தையை தேவனுக்கு கொடுத்தாள், தேவன் மொத்தமாக அவளுக்கு ஆறு குழந்தைகளைக் கொடுத்தார்.
நமக்கு கிடைக்கும் முதலானவைகளை நாம் தேவனுக்கு கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
5 அப்பம், 2மீன் தன்னிடம் இருந்ததை அந்த சிறுவன் இயேசுவிடம் கொடுத்தான். இயேசு அதை ஆசீர்வதித்து ஆச்சரியமாய் போஷித்தார்.
எனவே நம்மிடத்தில் உள்ளதை நாம் தேவனுக்கு கொடுக்க வேண்டும்.
புதிய ஆரம்பம்: நம்பிக்கையற்ற சூழ்நிலையில் நம் வாழ்க்கை இருந்தாலும் தேவன் ஒரு புதிய ஆரம்பத்தை நமக்கு கொடுப்பார்.
புதிய அறிமுகம்: நாம் இப்படிதான் என நினைக்கும் மனிதர்கள் மத்தியில் தேவன் நமக்கு புதிய அறிமுகத்தை ஏற்படுத்துவார்.
புதிய ஆசீர்வாதங்கள்: தேவன் தருகின்ற ஆசீர்வாதம் ஒன்றோடு முடிவடைவதில்லை. புதிய புதிய ஆசீர்வாதங்களை தேவன் நமக்கு தருவார்.
இந்த 3 காரியங்களையும் தேவன் இந்த மாதத்தில் நம் வாழ்வில் செய்து வழிநடத்துவார். ஆமென்.